Archive for the ‘Editor’s Desk’ Category

மகான்களின் உன்னத சரித்திரங்கள்

ஸ்ரீ மஹா பக்த விஜயம்

ஸ்ரீ மஹா பக்த விஜயம்


மாதவதாஸர் என்பவர் , நான்கு வேதங்களையும் நன்கு பயின்றவர்.பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தில்,தம் மனைவியைப் பிரிந்து வருந்தி வாழ்ந்து வந்தார். அவர் தன் வீடு, வாசல், சாமான்கள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிட்டு ஜகந்நாத க்ஷேத்திரத்தில் தங்கியிருந்தார்.மாதவதாஸர் ஊண் உறக்கமின்றி ஜகந்நாதரை துதித்து தியானம் செய்து கொண்டிருந்தார்.

இதைக் கண்ட பகவான், ருக்மிணியை அழைத்து அவருக்கு தங்க வட்டிலில் அமுதூட்டுமாறு பணிக்க, அவரும் அப்படியே மாதவதாஸருக்கு அன்னமிட்டு மகிழ்ந்தார். மறுநாள் காலையில் தங்க வட்டிலை காணாததால், அதை திருடிய பழியை தாஸர் மேல் சுமத்தி அவரை தனி அறையில் பூட்டினார்.

பின்னர், ஜகந்நாதப் பெருமாளே அர்ச்சகரது கனவில் தோன்றி, மாதவதாஸர் மேல் எந்த பழியும் இல்லை என்று விளக்கியதாக பழங்கதைகள் கூறுகின்றன. மாதவதாஸரும், மெய்யன்பனுக்கு ஓர் உதாரணமாய் திகழ்ந்து, தமது வாக்கு வன்மையையும் கல்வி அறிவையும் இறைவனுக்கே பணி செய்ய அர்ப்பணித்தார் என்பது வரலாறு.

இப்படி இன்னும் பல பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள், எளிய நடையில், லிப்கோவின் “ஸ்ரீ மஹா பக்த விஜயம்” என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் இலக்கியங்களிலுள்ள பல நல்ல கருத்துக்களை புத்தகப் பிரியர்கள் அனைவரும் படித்து, நல்ல பல சொற்பொழிவுகளை கேட்டு பயனைடைவீர்களாக!
- Vasudha Murali

 

விநாயக சதுர்த்தி

இந்துக்களின் ஐந்து பிரதான தெய்வங்களுள் விநாயகப் பெருமானும் ஒருவராக வழிபட்டு வரப்படுகிறார்.   பிள்ளையார், கணபதி, கணேசன், கணாதிபதி, விக்னேசுவரர் எனப் பல பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். தமிழ் மாதமான ஆவணி மாதத்தில், அமாவாஸ்யை அடுத்த நான்காம் நாள் (august மாதத்தில்)  சுக்ல பட்ச சதுர்த்தியன்று  விக்னேஷ்வரனின் பிறந்த தினமாக, இந்துக்களின் புகழ் மிக்க பண்டிகைகளுள் ஒன்றாக “விநாயக சதுர்த்தி ” திருநாள் இந்தியா முழுவதும் படு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

…..Vasudha Murali

முழுமுதற் கடவுளாக விளங்குவதால் ஒவ்வொரு நல்ல காரியத்தின் ஆரம்பத்திலும், இவரைப் பிரார்த்தித்து  பூஜித்தபின்பே இதர தெய்வங்களுக்குரிய பூஜைகளைத் தொடங்குவதென்பது தொன்றுதொட்டு வழக்கத்திலுள்ளது.

சிவன் – பார்வதியின் மூத்த மைந்தனும் , ஆனைமுகமும் விசிறி போன்ற காதுகளும், பெருத்த தொந்தியும் உடைய இவரை சிறுவர்
முதல் பெரியோர் வரை அனைவரும் பாரபட்சமின்றி வணங்குவர். இவர் தடைகளை நீக்கி வெற்றிக்கு வழிவகுப்பவர்; கல்வி, செல்வம்,
மெய்யறிவு பெருக வித்திடுபவர். படைவீரர்களின் (கணர்கள்) அதிபதியாக சிவபெருமான்  ஆக்கியதால்“கணபதி” ஆனவர். அம்மையப்பனை வலம் வந்து ஞானப்பழத்தை வென்ற “மூஷிக வாகன்“னும் இவரே. மோதகப் பிரியரும் இவரே. முருகப் பெருமானின் தமையனான இவருக்கு ஆனைமுகம் அமைந்தது பற்றி “சிவ புராணத்திலும்” “பிரம்ம வைவர்த்த புராணத்திலும் ” நிறைய கதைகள் கூறப்பட்டுள்ளன.

மஹாபாரதத்தைத் தடங்களில்லாமல் எழுத விக்னேஷ்வரனை வியாஸ மகரிஷி வேண்டுகோள் விடுத்ததன் பெயரில், தமது
தந்தத்தின் ஒரு பகுதியை உடைத்து எழுதுகோலாய் உபயோகித்து அக்காவியத்தை முறைப்படி எழுதி முடித்தார் என்பது புராணம்.

மஹாபாரதம் உருவானகதை:

இவரது தலை – ஆன்மாவையும்,  மனித உடல் – மாயையும், ஆனைமுகம் – மெய்யறிவையும்,  நடுவுடல் – “ஓம்” என்ற ப்ரணவ மந்திரத்தையும் குறிப்பிடுவதாக ஆன்றோர் கூறுவர். மேல் வலக்கரத்திலுள்ள கோல் – தடைகளை  நீக்கி வெற்றிக்கு வழிகாட்டுவதாகவும்,  மேல் இடக்கரத்திலுள்ள சுருக்குக் கயிறு அனைத்துக் கஷ்டங்களையும் போக்குவதற்கும்,  கீழ் வலக்கரத்திலுள்ள எழுதுகோலான உடைந்த தந்தம் தியாகத்தின்
சின்னமாகவும், கீழ் இடக்கரத்திலுள்ள ஏடு,  தொடர்ந்து அறிவை வளர்க்கவும், நடுவில் அவர் வைத்திருக்கும் லட்டு ஆன்மாவின் இனிமையை  உணரவும்,  விசிறி போன்ற காதுகள் நமது முறையீடுகளுக்கு அவர் செவிமடுக்கிறார் என்றும், அவர் இடுப்பிலுள்ள ஸர்ப்பம் ஊக்கத்தின் வடிவமாகவும் அமைந்திருப்பதாக ஐதீகம்.

விநாயக சதுர்த்தியன்று இந்துக்கள் விடியற்காலையில் எழுந்து, வாசலில் கோலமிட்டு,  மாவிலைத்தோரணம் கட்டி,பூஜையறையில்
ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மேல் களிமண்ணால் ஆன பிள்ளையாரை ஸ்தாபித்து அதன் பின்னே அழகிய குடையை வைத்து, புஷ்பங்களால் அவரை அலங்கரித்து 108 நாமாக்களால் அர்ச்சனை செய்து, பலவித பழங்கள், மோதகம் என்னும் இனிப்பு வகை, (அரிசி மாவு, தேங்காய்,வெல்லம் இவற்றால் தயாரிக்கப்படும் கொழுக்கட்டை) சுண்டல், பொரி,கடலை, அவல், எள் உருண்டை போன்றவைகளை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் இவரை பூஜித்த பின்னர் இவரை ஊர்வலமாக வண்டிகளில் ஏற்றி கடலில் கரைக்கும் சம்பிரதாயம் சில ஊர்களில் வழக்கில் உள்ளது.

‘பிள்ளையாரைத் தினம் தினம் அருகம்புல், வன்னியிலை, மந்தாரைப் பூ ஆகியவற்றால் வழிபட்டு வளமான வாழ்வும் குறையாத செல்வமும் பெறலாம்’ என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. நாமும் விநாயக சதுர்த்தியைப் பக்தியுடன் கொண்டாடுவோம்.

பிள்ளையாருக்குத் திருமணம் :

பிரம்மதேவனுக்கு புத்தி, சித்தி என்ற இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்மதேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். உடனே அவர் நாரதரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறி, விநாயகரிடம் தூது அனுப்பினார். நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். புத்தியையும், சித்தியையும் அங்கம் அங்கமாக வர்ணித்து இப்படிப்பட்டவர்களை மணக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி விநாயகரின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தினார். பிள்ளையாரும் சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறி விட்டார். பிரமனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே
சிவபெருமானும் பார்வதியும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா   (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்கலோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம்
கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு  உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது. சித்தியை லட்சுமி தேவியும், புத்தியை இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க, சித்தி, புத்தி  இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார். பிறகு திருக்கயிலாயம் சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கி அமைதியாக இல்லறம் நடத்தலானார்.
அது எப்படியோ அண்ணனாகிய பிள்ளையாருக்கும், தம்பியாகிய முருகனுக்கும் இருதுணைவிகள் அமைந்துவிட்டனர். முருகனுக்கு வள்ளியும், தெய்வானையும் இரு மனைவியர் என்பது எப்படி இச்சா சக்தி, கிரியா சக்தியாகிய த்த்துவம் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல விநாயகப் பெருமானின் சித்தி, புத்தி என்பதும் அவரது சக்திகளே என்றும் கூறப்படுவதுண்டு.

கணக்கு காட்டிய பிள்ளையார் :

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் கட்டும் பொறுப்பை ஓர் அமைச்சரிடம் கொடுத்திருந்தார் சோழ மகாராஜா. அந்த அமைச்சர் விநாயக பக்தராவார். கங்கைகொண்ட சோழபுரம் போனதும் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டினார். அதற்கு நித்திய வழிபாடுகளும் நடைபெற ஏற்பாடு செய்தார். ராஜா அனுப்பும் பணத்தின் பெரும் பகுதியை கோயில் செலவுக்கும், விநாயகர் வழிபாட்டுக்கும் பயன்படுத்தினார் அமைச்சர். அவரின் செயலைப் பிடிக்காத சிலர் ராஜாவிடம், ‘நீங்கள் அனுப்பும் பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்கு அமைச்சர் செலவிடுகிறார்’ என்பதாகக் கூறினார்.
ராஜா ஒரு தூதரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அனுப்பினார். அவன் கையில் அரசாணையைக் கொடுத்தனுப்பினார். அரசனிடமிருந்து  வந்த ஓலையைப் பார்த்தவுடன் பயந்தார் அமைச்சர். மறுநாள் கணக்குடன் வந்து சந்திப்பதாக ராஜாவுக்கு தகவல் அனுப்பினார். அமைச்சர் தான் கட்டிய பிள்ளையார் கோயிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார். “இறைவா! உன்மீது கொண்ட பக்தியால் எந்தக் கணக்கும் எழுதாமல் போய் விட்டேனே!
இப்போது நான் என்ன செய்வது?” என்று புலம்பினார். இரவு முழுவதும் விநாயகரைத் தியானித்தவாறு பொழுது விடிந்தது. காலை, மீண்டும் விநாயகரிடம் சென்றார். அப்போது விநாயகர், “பக்தனே! கவலைப்படாதே!  நான் சொல்லும் விவரத்தை ஒர் ஓலைச்சுவடியில்
எழுதி, அதை அரச சபையில் படி, அதை அரசர் ஏற்பார்” என்றார். உடனே, சுவடிக்கட்டை எடுத்துக் கொண்டு அதன் முதல் பக்கத்தில் விநாயகர் சொல்வதை எழுதத் தயாரானார் அமைச்சர். விநாயகர் ஒரே ஒரு தொடரைச் சொன்னார். “எத்து நூல் எண்பது லட்சம” என்பதுதான் அந்தத் தொடர். “பிள்ளையாரப்பா! இது போதுமா?” என்று கேட்டார் அமைச்சர். “இதை மட்டும் படி, போதும்” என்றார் விநாயகர்.
நம்பிக்கையுடன் ஓலைக்கட்டை எடுத்துக்கொண்டு அரச சபையை நோக்கிச் சென்றார் அமைச்சர். ராஜா, சில கேள்விகளை அமைச்சரிடம் கேட்டார். இறுதியாக, பதிலில் திருப்தி அடைந்த நிலையில், “சரி! கணக்கைப் படியுங்கள்” என்றார் ராஜா, விநாயகர் சொன்ன வரியைப் படித்தார் அமைச்சர்.

“அப்படியா? எத்து நூலே எண்பது லட்சம் வாங்கியிருக்கிறீர்களா? ரொம்ப சிக்கனமாகவே செலவழித்து இருக்கிறீர்கள். போகும் போது இன்னும் கொஞ்சம் பொற்காசுகளை வாங்கிச் செல்லுங்கள்” என்றார் அரசர்.கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு அருகில் இருக்கும் இந்த விநாயகருக்கு கணக்குப் பிள்ளையார் என்று பெயர்.

கஜமுகன் பெருச்சாளியான கதை:

மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஆயுதங்களாலும், எவராலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் கயிலாயம் சென்று விநாயகரிடம் முறையிட்டான். விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன்  விட்ட  பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினல் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி
விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வர, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக உருமாறினான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார். இப்படி விநாயகர் பற்றி ஏராளமான கதைகள் புராணங்களில் உள்ளன.  5 நான்கு வருடங்களுக்குமுன், எங்கள் இணையதளம் இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயக சதுர்த்தியன்றுதான் புதுப்பொலிவு பெற்றது என்பதை பெருமகிழ்ச்சியுடன் நினைவுகூற விரும்புகிறோம். மேலும், பல புதுமைகள் வந்தவண்ணம் இருக்கும்  என்பதனையும் தெரிவிக்கிறோம். இணையதள வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து எங்களது புதிய முயற்சிகளில் எங்களை ஊக்கபடுத்த வேண்டுகிறோம்.

எங்களது பிரசுரங்களில் ஒன்றான “ஸ்ரீ கணபதி ஸஹஸ்ரநாம”த்தை பாராயணம் செய்தால் எடுத்த காரியங்களில்  இடையூறுகள் அகலுவது
மட்டுமன்றி, நினைத்த காரியங்களெல்லாம் ஸித்திக்கும். விநாயகரின் பெருமையை மேலும் அறிய எங்களது “விநாயக விஜயம்” எனும் நூலை வாசித்து மகிழுங்கள்.

 

கோகுலாஷ்டமி

krishna0002 அவதாரங்களுள் ஒருவரான “ஸ்ரீ க்ருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் வியாழக்கிழமையன்று  இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்        சிறப்பாகக் கொண்டாடப்பட      விருக்கின்றது. அன்றுமக்கள் இனிப்புகள்,  காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள பல செய்து   கண்ணனுக்கு   நிவேதனம்    செய்து மகிழ்வர்.  அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு  கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்டிர் அழைப்பர்.அன்று பல கோயில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.

மங்களகரமான இந்நாட்களில், ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு(மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும் த்ருடகாத்ர ஆரோக்யத்தையும்
எல்லா ஸெளக்யங்களையும் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை கீத கோவிந்தம்”,”ஸ்ரீமந் நாராயணீயம்”,
“ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம்.

“ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

ஆனந்தம் அடைந்து மகிழ்வோம்! “

 

அளவிலாப் பலன்களைத் தரும் அக்ஷய த்ரிதியை

iswarya_lakshmi_2

‘க்ஷயம்’ என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!

மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் பொன்னும்,வெள்ளியும், பொருளும் வாங்கினாலும் அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில……….

1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.

2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.

3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் ‘குசாவதி’ நாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.

4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில்அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே ‘அக்ஷ்யம்’ என்றார் கண்ணன். குறையாமல்வளர்ந்தது திரெளபதியின் சேலை.காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.

5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்’ என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.

6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று (க்ஷயரோகம்) அவன் உடல் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.

7. ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின்தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ணகரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.

8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.

9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாத’ அட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.

10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறிய ‘அக்ஷ்யம்’ என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.

11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அக்ஷய’ என்று நிறைவடையும். ‘அக்ஷய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.

Inputs from
‘நவரத்னமாலா’ ஸ்ரீ எம்.கே. வெங்கடராமன்
‘குமுதம்’ பக்தி.
‘சக்தி’ விகடன்

 

இனிய விக்ருதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

puthaantu
இந்தியாவில் க்ரக்கேரியன் (Gregorian) காலண்டருடன், இந்து பஞ்சாங்கமும் அனேக விசேஷங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இப்பஞ்சாங்கப்படி,ஏப்ரல் மாதத்தின் நடுவில் 13, 14 ந்தேதியில் வருவதே சித்திரை வருடப் பிறப்பு. சித்திரை மாதம்  தொடங்கியே 12 மாதங்களை வரிசையாகக் கணக்கிடுகின்றனர் தமிழர்கள். இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள் அன்றைய தினம் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வண்ணக்கோலமிட்டு,வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டிக் கொண்டாடுவர். புத்தாடைகள் உடுத்தி, பெரியோர்களிடம் ஆசி பெற்று மகிழ்வர். மேலும், மாங்காய்ப் பச்சடி செய்து வடை,பருப்பு பாயஸத்துடன் உண்டு மகிழ்வர். வாழ்வில் இனிப்பும், கசப்பும் மாறி மாறி வரும், அதனைத் துணிவோடு எதிர்கொண்டு ஜெயிக்கவேண்டும் என்பதனை உணர்த்தவே இந்த ‘மாங்காய்ப் பச்சடி” வழக்கம் என்பர் பெரியோர்.(வெல்லம், மாங்காய், வேப்பம்பூ சேர்த்துச் செய்யும் ஒருவகை இனிப்பு.

இவ்வினிய புத்தாண்டில் கனவுகள் நினைவாகி வாழ்வு மேம்பட “லிப்கோ” வின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். —-Read more

சித்திரை மாதத்தில் தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் 10-12 நாட்களுக்கு கோலாகலத் திருவிழா நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், சங்கரன் கோயில் சித்திரைத் திருவிழாவும் பிரஸித்தி பெற்றதாகும். மஹாபுருஷர்கள் ஆதிசங்கரரும் ராமானுஜரும் அவதரித்த மாதமும் சித்திரையே.

சித்திரை வருடப்பிறப்பு கேரள மக்களால் “விஷு” என்று கொண்டாடப்படுகிறது. “மங்களத்திண்ட ப்ரதீஷ” என்று இதனை அழைக்கின்றனர்.

விஷுவிற்கு முதல் நாள் இரவே ஒரு பெரிய தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதில் பொன் நகைகளையும், நவதானியம், பழங்கள்,வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மாவிலைக்கொத்து, பலகாரங்கள் ஆகியவற்றை அழகாய் அலங்கரித்து பூஜையறையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து விடுவர்.

விஷூ நாளில் பொழுது விடியும் முன்பாக கண் திறவாமல், முதல் நாள் அலங்கரித்து வைத்த தட்டில் உள்ள பொருட்களை கண்ணாடி மூலமாகக் கண்டுவிட்டுத்தான் முகம் விழிப்பர். இதனை விஷுக்கனி காணுதல் என்பர். சுபமான, மங்கலகரமான பொருட்களைக் கண்டு அந்த ஆண்டைத் துவக்குதால், கனவுகள் நிறைவேறி, இவ்வருடம் இனிதாய் கழியும் என்பதே இவ்வழக்கத்தின் அடிப்படை நம்பிக்கை. (ஆனால், தமிழக அரசு  தை மாதமே ஆண்டின் முதல் மாதம் என்றும், பொங்கல் திருநாளே புத்தாண்டு எனவும் அறிவித்துள்ளது.)

 

காரடையான் நோன்பு

ஸ்ரீ காஞ்சி காமாட்சி – காஞ்சிபுரம்

காரடையான் நோன்பை தென்னாட்டில் சாவித்திரி நோன்பு ,காமாக்ஷி விரதம் என்றும் அழைப்பர். வழக்கமாக தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம் என்றும் சொல்லப்படுகிறது.

நோன்பு பற்றிய கதைகள் :
காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணலில் பிடித்த சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே காரடையான் நோன்பு விரதம் இருந்ததாகவும், சிவபெருமான் பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை சொல்லப்படுகிறது.

ராஜகுமாரி, சாவித்திரி தன் மனதிற்கு இசைந்த கணவன் சத்தியவானை மணந்து காட்டில் வாழ்ந்து வந்தனர். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் கணவனை, இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தாள். அதேபோல் மரம் வெட்டச்சென்ற சத்தியவான் உயிர் இழக்க, பதிவிரதை சாவித்திரி யமனை பின் தொடர்ந்துசென்று, தங்களுக்கு நூறு குழந்தைகள் பிறக்க வரம் கேட்டு, யமதர்ம ராஜனும் வரம் கொடுக்க இறந்த கணவனுக்கு உயிர் கொடுக்கச் செய்து, மீட்டு வந்ததாகக் கதை சொல்லப்படுகிறது.

பூஜை செய்யும் முறை:

இதர பண்டிகைகளுக்கு செய்வதுபோல், வீட்டின் வாயில் நிலையிலும், ஸ்வாமி அறை நிலையிலும் மாவிலைத்தோரணம் கட்ட வேண்டும்.பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் வகையறாக்களை வழக்கம் போல் ஒரு தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும்.

பலா இலை அல்லது வாழை இலையில் பிரசாதம் வைக்க வேண்டும் “ நோன்பு அடை” முக்கியம். “நோன்பு அடை” அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு நிவேதனம்  செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.

மொத்தத்தில் பெண்டிர் அனைவரும் தம் தம் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு.

 

நவராத்ரி

navarathri0001ஸ்ரீ ராமனுக்கு இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ‘ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி’ என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரத்தை வலது காதிலே உபதேசிக்கப்பட்டதால்,ஸ்ரீ ராமன், தேவி பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும்  இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தமையால் சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது.  இராமனும் அன்னையை வழிபட்டு  தசக்ரீவனை சம்ஹாரம் செய்தார். தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதா ஸகஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி முதலான சக்தி வாய்ந்த நூல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெறுவோமாக!…….வசுதாமுரளி

கடும் வெயில் காலமும் – கடும் மழைக் காலமும் எமனின் இரண்டு கோரைப்பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன. இந்த இரண்டு
காலத்திலும் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். உடலை பாதிக்கும். அதனால் உள்ளமும் பாதிப்பு அடையும். இந்த இரு வகையான பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பவள் அம்பிகை. அதனால்தான் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாம் ‘நவராத்ரி’ என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம்.

தேவிபாகவதம்:….

தக்ஷப் பிரஜாபதியின் மகள் தாட்சாயணி, தக்ஷன் விருப்பத்துக்கு மாறாக ஈசனை மணக்கிறாள். அதனால் தக்ஷன் ஈஸ்வரன்பால் வெறுப்புற்றான், தான் செய்யும் யாகத்துக்கு ஈசுவரனை அழைக்கவில்லை. எனினும் தாட்சாயணி கணவருக்காக நியாயம்
கேட்டு அங்கே சென்றாள். தன்னையும் தன் கணவரையும் தந்தை நிந்திப்பதைக் கேட்டு மனம் பொறாது அங்கேயே உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபம் அடைந்த சிவன் யாகத்தை அழித்து, தக்ஷனையும் சிரச்சேதம் செய்தார். உயிர் நீத்த தேவியின் உடலைத் தோள்மீது போட்டுக்கொண்டு திரியலானார். மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அந்தப் புனித உடலைத் துண்டுகளாகும்படிச் செய்து சிவபிரானின் தாபத்தைத் தணித்தார். அப்படித் துண்டுகளாகிய தேவியின் உடல் பல இடங்களிலும் விழுந்தது. அப்படி மண்ணில் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் எனப்போற்றப்படுகின்றன.
சாக்தபீடங்கள் நான்கு , ஏழு , எட்டு , பத்து, பதினெட்டு, நாற்பத்து இரண்டு, ஐம்பது, ஐம்பத்து இரண்டு, நூற்றுஎட்டு என்று பல விதமாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக அன்னையின் தேகம் அக்ஷரமயமானதால் அக்ஷரங்களின் எண்ணிக்கைப்படி ஐம்பத்தி ஒன்று எனச் சொல்லப்படுகின்றன. இந்த சாக்த பீடங்களும்,மற்ற தேவிக்ஷேத்ரங்களும் சேர்ந்து பாரதநாட்டைப் புண்ணிய பூமி யாக்குகின்றன.
முப்பெரும் தேவியர்:
நவராத்ரியின் போது, முதல் மூன்று நாட்கள் ‘ துர்கை’ வழிபாடாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் ‘லட்சுமி‘ வழிபாடாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் ‘சரஸ்வதி’ வழிபாடாகவும் செய்யப்படுகிறது. இந்த மூன்று சம்ஹாரத்தில் ஆரம்பத்தில் வரக்கூடிய மது-கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும்,அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மஹாலட்சுமி ஆகவும்,மூன்றாவது கதையில் வரும் சும்ப-நிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மஹாசரஸ்வதியாகவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது .

தேவி மகாத்மியம் :
தேவி மூன்று வடிவுடையவள் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் காளிரூபம், லக்ஷ்மீ ரூபம், ஸரஸ்வதி ரூபம்.
தேவர்கள் செய்த கடும் தவத்தினால், தன் சக்தி சேனைகளுடன் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுர அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே “தேவி மகாத்மியம்” எனப்படுவது.தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவது மாகவோ நவராத்ரி நாட்களில் படிப்பவர்கள், தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும், தீர’ தேவிமகாத்மிய’ பாராயணமே சிறந்த வழி.

கொலு: ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக’ கொலு’ என்று புரட்டாசி அமாவாசையன்று, நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.

கொலு வைப்பது:

‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!’ என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள்.

படி                                      தன்மை                                 பொம்மைகள்

கீழிருந்து 1                     ஓரறிவு                    செடி,கொடி,மரங்கள், பூங்கா……

2                                        இரண்டறிவு            நத்தை,சங்கு,- மெள்ள ஊர்வன….

3                                       மூன்றறிவு              எறும்பு -  தரையில்  ஊர்வன…

4                                       நான்கறிவு              பறவை, வண்டு – பறப்பன

5                                     ஐந்தறிவு                  பசு போன்ற விலங்கினங்கள்

6                                    ஆறறிவு                   மனித பொம்மைகள்,செட்டியார்

7                                     மகான்கள்             ஆதிசங்கரர், விவேகானந்தர்,

8                                   தெய்வம்                   தசாவதாரம்

9                                   பூரண கும்பம்       அம்பிகையின் திரு உருவம்

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன
என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.
பன்பெயர் நாயகி :  அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப் படும் போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்த வளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும்,மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள்.சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப் படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய
வடி வெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.

துர்கா பூஜை : இமவானின் புத்ரியாக அவள் இறங்கி வரும் திருவிழாவே துர்கா பூஜைத்திருவிழாவாகப் போற்றப்படுகிறது. அப்படி அவள் வரும்போது லட்சுமி, ஸரஸ்வதி, கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் வருகிறார்கள். மனிதனின் நல் வாழ்வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்ட சிறு சேனையின் தலைவியே அவள். அவளே அனைத்தும் ஒருங்கமைந்த சக்தி சொரூபம். செல்வத்தைப் பெருக்கும் சின்னமாக லக்ஷ்மி, கலைஞானங்கள் அளிக்க ஸரஸ்வதி, விக்னமின்றிச் செயல்பட கணபதி, ஆற்றலை வளர்க்க முருகன் இப்படி அம்பிகையின்
அம்சங்களாகவே இந்த நால்வரையும் பார்த்துத் தொகுத்து வழிபடுவதுதான் துர்கா பூஜை. நிறைவாழ்வின் பொலிவுகளை விளக்குகின்ற சக்தியாக அவை அமைந்துள்ளன.

நவராத்ரியின்போது செய்ய வேண்டிய நவ கன்னிகை பூஜை:

நவராத்ரி காலத்தில் ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்யவேண்டிய முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர்விரிவாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமான விதிகள்:

நாள்                               பெண்ணின் பெயர்                                பலன்

முதல் நாள்             குமாரிகா-சுமார் 2 வயது                    தரித்திர நாசம்

2 வதுநாள்                திரிமூர்த்தி – சுமார் 3 வயது              தனதான்ய வளம்

3வது நாள்                கல்யாணி – சுமார் 4 வயது               பகை ஒழிதல்

4வது நாள்                ரோகிணி – சுமார் 5 வயது                 கல்வி வளர்ச்சி

5வது நாள்               காளிகா – சுமார் 6 வயது                    துன்பம் நீங்குதல்

6வது நாள்               சண்டிகா -சுமார் 7 வயது                  செல்வ வளர்ச்சி

7வது நாள்              ஸாம்பவி -சுமார் 8 வயது                க்ஷேம விருத்தி

8வது நாள்               துர்கா -சுமார் 9 வயது                          பயம் நீங்குதல்

8வது நாள்              சுபத்ரா-  சுமார் 10 வயது                   ஸர்வ மங்களம்

உண்டாதல்

நவராத்ரி பூஜையின் விரிவான விளக்கங்களுக்கு ‘லிப்கோ‘வின் “நவராத்ரி பூஜை” நூலைக்காண்க…. 636

இந்தியாவில் நவராத்ரி: இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நவராத்ரி விழா ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அதே போலக் கர்நாடகத்தில் தசராவென்றும்,தமிழ்நாட்டில் நவராத்ரி என்றும் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், சிற்பிகள், வித்வான்கள், தொழிலாளர்கள் என்று அனைவரையும் ஈடுபடுத்தும் மகோன்னத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடு முழுவதும், எல்லாப் பிரிவினரையும்  ஈடுபடுத்தும் தனிப்பெருமை நவராத்ரி விழாவிற்கு இருக்கிறது. மரப்பாச்சிகளால் ஆன கொலுவையே மைசூர் வாசிகள் நவராத்ரியில் வைத்து மகிழ்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் நவராத்ரி முதல் நாளன்று, சிறு மண்தொட்டிகளில் நவதான்யங்களைத் தூவி பாலிகை வளர்ப்பார்கள்.
நவராத்ரி ஒன்பது நாட்களும் தேவி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, விஜயதசமியன்று பெண்கள், பாலிகையை ஆற்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் கூத்தனூரில் உள்ள ஸரஸ்வதி கோயில் பிரபலமானது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்கள் வெளிமண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்வர். அன்று எல்லோரும் தேவியின் பாதங்களுக்கு மலர் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஹிமாச்சலத்திலுள்ள ‘குலு‘ என்னும் பகுதியில் உள்ள சிறிய கோயில்களிலிருந்து விக்ரஹங்கள் ஊர்வலமாக
கொண்டுவரப்பட்டு, ரகுநாத் ஜி மந்திர் முன்பு நவராத்ரி விழா நடத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பொது இடங்களில் கூட மகிஷாசுரமர்த்தினி திருவுருவம் வைக்கப்பட்டு, தசரா பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயதசமி அன்று பூஜை செய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக வீதிகளில் உலாவந்து கடலில் கரைக்கப்படுகின்றன.

வடநாடுகளில் நவராத்ரி நாட்களில் ‘ ராம் லீலா‘ என்ற நிகழ்ச்சி பொது இடங்களில் நடக்கிறது. துர்கை மகிஷாசுரனை வென்ற நாள்
விஜயதசமி என்று கூறப்பட்டாலும், சில இடங்களில் ராமன் ராவணனை வதைத்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டிலும் ஸரஸ்வதி வழிபாடு:

ஜப்பான் நாட்டில் ஸரஸ்வதியை’ பென்டன்’ என்றும் திபெத் நாட்டில் ஸரஸ்வதியை ‘யங்சன்ம’ என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள்
பாலித்தீவுப்பகுதியில்’கலுங்கன்’ என்று ஸரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

நவராத்ரியில் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:

ஒன்பது நாட்களும் “வபனம்” (முடி நீக்குதல்) ஆகாது: மருந்துண்ணல் கூடாது.
பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்கவேண்டும்.
இரவில் பட்டினி இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பகலெல்லாம் நோன்பு இருந்து,  இரவில் அன்னையின் வழிபாடு நிறைந்த பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இதுவும் ஏற்றதே!
இந்த ஒன்பது நாட்களிலும் பானகமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம். இக்காலத்தில் வீட்டிற்கு வரும் சுவாசினிகளை ஜன்ம விரோதியாக் இருந்தாலும் சக்திவடிவமாகவே பாவித்து தாம்பூலம் அளித்து அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்தல் வேண்டும்.
தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதாஸகஸ்ரநாமம் முதலான ஸம்ஸ்க்ருத நூல்களும் அபிராமி அந்தாதி,அபயாம்பிகை சதகம் முதலான தமிழ் நூல்களும் அம்பாளின் பெருமைகளை உணர்த்துபவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்களைப் படித்து அம்பிகையின் அருளை பெறுவீர்களாக! மேலும் நவராத்ரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா அஷ்டோத்ரமும், ஸஹஸ்ரநாமமும்,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ர நாமமும், அடுத்த மூன்று நாட்கள் ஸரஸ்வதி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ரநாமமும் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பாராயணம் செய்து, நற்பலன்களைப் பெறுவோமாக!