Archive for the ‘Editor’s Desk’ Category

தைத்திருநாள் – பொங்கல் விழா –ஜனவரி 14 – 17

தை மாதத்தில் தமிழர்கள் விசேடமாக கொண்டாடும் பொங்கல் விழா பிறந்தது எப்படி? இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் இவ்விழா இருந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் 28 நாட்கள் கொண்டாடியதற்கான சான்று இருக்கிறது.

மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால்,மேகம் மும்மாரி பெய்து, பயிர் பச்சை செழிக்கும் என நம்பி மக்கள் இதனை, இந்திர விழாவாகக் கொண்டாடினர்.  அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்து அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில் சூரியனைப்பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து, தமது நன்றியை விவசாயிகள் தெரிவிக்கும் பொங்கல் திருநாளாக மக்கள் வழிபட துவங்கிவிட்டனர்.

இப்போது நாம் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் மட்டுமே இவ்விழாவை கொண்டாடுகிறோம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் – போகி

புதுப்பானையில் புது அரிசியிட்டு, கரும்பு, மஞ்சள் கிழங்கு கட்டி, சூரியனை வழிபட்டு சமைக்கும் – தைப்பொங்கல்.

உழவுத்தொழிலுக்கு உதவியாகயிருக்கும் கால் நடைகளுக்காக கொண்டாடும் – மாட்டுப்பொங்கல்

இறுதியாக,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் பொது இடங்களுக்கு குடும்பத்தாருடன் சென்று, இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் தரும்  – காணும் பொங்கல்.

ஜாதி மத பேதமின்றி சமத்துவம் வளர்க்கும் நோக்கோடு துவக்கப்பட்டது தான் பொங்கல் விழா.

இயற்கையையும் உழைப்பையும் மையமாக வைத்து கொண்டாடப்படும் – பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்!

அனைவரும் இந்நந்நாளில் எங்களது ”சூரிய சதகம்”,”ஆதித்ய ஹ்ருதயம்” போன்ற புத்தகங்களை வாசித்து வளம் பெறுங்கள்.

– வசுதா முரளி.

 

கார்த்திகைத் தீபத்திருவிழா

KarthigaiDeepam‘கார்த்திகை தீபம்’ மூன்று நாட்கள்  தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தவிர, இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும்  இல்லங்களில்  தீபங்களை ஏற்றி வைக்கும் நேர்த்தியான காட்சியை இன்றும் நாம் பார்க்கக்கூடும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று  அழைக்கப்படுகிறது. விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி  வழிபடுகிறார்கள்.

”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் பனை ஒலையால் சொக்கப்பானை வேய்ந்து  சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

”சொக்கப்பானையை வணங் குவது சொக்கப்பனை வணங் குவது ஆகும்.” சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப் பானை ஆகும்.

1. கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

கங்கைக்கு தீபம் ………
இன்றும் தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தஞ்சை மாவட்ட காவிரி தீரவாசிகள் சூரியன் நன்கு மறைந்த பின்னர் இம்மாதத்தில் “மந்தாரை இலை”யினால் செய்யப்பட்ட சிறிய ஓடத்தில் தீபம் ஏற்றி வைத்து, வடநாட்டினர் ஹரித்வாரத்தில் கங்கையில் சோதி வழிபாடு செய்வதை ஒக்க – காவிரியில் சமர்ப்பிக்கின்றனர். அத்தீப ஓடங்கள் ஒளிவீசிக் கொண்டு ஓடும் நதியில் மிதந்து போகும் அற்புதமான காட்சியைக் கண்ணுற்று மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள்.

பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச் சிலக்குறிப்புகள்

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.

நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.

”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

தீப ஒளியின் மகிமையைப் பற்றி தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் கதைகள்:

1.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்தார். தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயை குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நின்று விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

2.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். இதைப் பற்றி ரிக்வேதம், பாஸ்கரசங்கிதை, சரபஉபநிடதம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

3.கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் காட்சி அளிக்கிறார்.

திருவண்ணாமலையைப் பற்றி… ……

திருவண்ணாமலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 266 அடி உயரத்தில் உள்ளது. தெற்கேயுள்ள முக்கியமான சைவக் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், பூமியின் இருதய ஸ்தானமாகும். நினைத்தாலே முக்தி தரும். இம் மலைக்கோயிலில் அருணாச்சலேஸ்வரர்தான் பிரதான தெய்வம்.

இந்த மலையுகத்திற்கு யுகம் மாறுபட்டு வருவதாக “ஸ்கந்த புராணம்” வர்ணித்துள்ளது. முதல் யுகமாகிய கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் மிகுந்த ஒளிவீசும் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் திருவுருக்கொண்டு “அருணாசலம்” என்று திருப்பெயர் பெற்றது என்பர்.

இக்கோயில் ஜோதிர்லிங்கம் எனப்படும் லிங்கோத்பவர்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், விஜயநகர மன்னன் மற்றும் தஞ்சாவூரின் நாயக்கர்கள் இக்கோயிலுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் பற்றி…. ……..

அண்ணாமலை தீபம்: சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது. 51/2 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான உலோக பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு ) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. 30 மீட்டர் காடாத் துணியும் 2 கிலோ கற்பூரமும் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி 35 கி.மீ தொலைவு வரை தெரியும்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

இன்றும் தீபதரிசனத்திற்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடி வந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும் அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்   முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக   ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் எங்களது வெளியீடான ” கந்த புராணம் ” மற்றும்  மணியான பாடல்கள் அடங்கிய ” சைவத்திரு முறைகள் ” போன்ற புத்தகங்களைப் படித்து  அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறுவோமாக!

 

இன்பம் பொங்கும் தீபாவளி

Lakshmiதீபம் என்றால் ஒளிவிளக்கு , ஆவளி என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி , இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே “தீபாவளி”. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து   அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமீயும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்  கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும். எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா? ” என்று வினவி விசாரிக்கிறோம்.
லக்ஷ்மீ தேவி உலகத்தாரின் சகல வெற்றிக்கும் காரணமான தெய்வம். மனஅமைதி, அறிவு, செல்வம், தானியம் போன்ற பலவற்றை அளிக்கும் லக்ஷ்மீ ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். சிலருக்கு பொருட்செல்வம் தரும் தனலக்ஷ்மீ, சிலருக்கு வெற்றியைத் தரும் விஜயலக்ஷ்மீ, சிலருக்கு  வாழ்வில் ஒளி தரும்  ராஜலக்ஷ்மீ, சிலருக்கு வேண்டிய வரம் தரும் வரலக்ஷ்மீ, பலருக்கு இனிய இல்லறத்தை தரும் கிரஹலக்ஷ்மீ.  இல்லத்தில் அமைதி, பளிச்சென்ற சுத்தம், குழந்தைகளின் சிரிப்பு, மென்மையான இசை, நறுமணம் நிறைந்த உணவு ஆகியவை வீட்டில் லக்ஷ்மீயை சுண்டி இழுக்கக்கூடியவை என்று கருதப்படுகிறது. எனவேதான் தீபாவளி சமயம் லக்ஷ்மீ தேவிக்கு விருப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி தேவியை வரவேற்று வளமான வாழ்க்கையைத் தருமாறு மக்கள் வேண்டுகின்றனர். தீபாவளியன்று, வழக்கங்கள் பல்வேறாயினும் குதூகலமும் கொண்டாட்டமும் ஒன்றே. ஜாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகையும் இதுவே.

தீபாவளியன்று , எங்களது “லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்”  என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றி லக்ஷ்மீ தேவியை பூஜித்து, தீய குணங்களை அறவே அழித்து, நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்து இறைவனுடைய பரிபூரண அருளைப் பெறுவோமாக !

1. தீபாவளியைப் பற்றி ………

“மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் தான் பிறந்த பயனை மறந்து, தன்னைக்காத்துக் கொள்ளவும் மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருள்களில் தானே மயங்கி, அழிவுப் பாதையில் செல்கிறான். மனிதனுடைய பிரத்தியேக உயர்ந்த குணங்களான விவேகம், பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்கே  உரிய  அகங்காரமானது   பயனற்றுப்   போகச் செய்துவிடுகிறது. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே  தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, தான் எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழ வைத்துக் கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்யவேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக!”

- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள்

2.தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும்: தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய்,ஸ்ரீ ராமர்  கைகேயியின்  வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள்   ஏற்றி   வாண வேடிக்கைகளுடன்  கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி இத்  திருவிழாவை  அனைவரும்  காலம்  காலமாகக் கொண்டாடுகின்றனர்.

மூன்றாவதாய் தசாவதாரங்களில் ஒன்றான வாமனாவதாரம் பற்றிய கதை. அசுரர்களின் அரசனான பாலி (ப்ரஹலாதனின் பேரன்), மூவுலகையும் ஆட்கொள்ள பகவானை நினைத்து விஸ்வஜித் யாகம் புரிந்து தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து தேவலோகத்தை கைபற்றினார். மனம் வாடிய அதிதி (தேவர்களின் அன்னை) மஹாவிஷ்ணுவிடம் முறையிட, வாமனராய் மிகச் சிறிய பிராமணர் உருவில் அவதரித்து , அஸ்வமேத யாகம் நடத்திக்கொண்டிருந்த அரசன் முன் தோன்றினார். வாமன உருவிலிருந்த விஷ்ணுவும் அரசவையில் பாலியிடம் மூன்று அடி மட்டுமே அளக்கத் தேவையான நிலம் வேண்ட, மன்னனும் அவரது கோரிக்கையை ஏளனமாய் நினைத்து வரம் வழங்கினார். வாமனரோ விஸ்வரூபமெடுத்து தம் முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையையும் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் தேட, பாலியோ வேறு வழியின்றி கொடுத்த வாக்கை நிறைவேற்ற பகவானுக்கு தன் சிரம் தாழ்த்தி இடமளித்தார். இவ்வாறாக சொன்ன சொல்லை காப்பாற்றி மஹாவிஷ்ணுவின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். சில ஊர்களில் பாலியின் கதையை நினைவுகூறும் வகையிலும் தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்றனர்.

3.மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டம்:

மேற்கு வங்காளம் – கிழக்கு திசை

மஹாளய அமாவாசையன்று தொடங்கி “துர்க்கா பூஜா” கொண்டாடும் வங்காள மக்கள்,  பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருட்டைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் லட்சுமீ பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாயி புட்கோ’ என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரம் – மேற்கு திசை

இம் மாநிலத்தினர் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி,  சதுர்த்தசி, அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரம் முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். வீட்டை சுத்தம் செய்து அனைத்து பாத்திரங்களையும் கழுவி, விதவிதமான இனிப்புகளை தயாரித்து, புது துணிமணிகளை வாங்கி பண்டிகை கொண்டாட முற்படுகின்றனர். சதுர்த்தசியன்று மாலை ‘தன்பூஜா’ எனப்படும் லக்ஷ்மீ பூஜை நடத்துகின்றனர். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர்கள் வீட்டில் கூடி பூஜை செய்கின்றனர். வீட்டிற்குப் பெரியவர் பூஜைசெய்ய, வீட்டின் பெண்மணிகள் மராட்டிய பாணியில் புடைவை அணிந்து மூக்கில் ‘நாத்’ என்ற வளையம் அணிந்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மங்களகரமாக காட்சியளிக்கின்றனர். இனிப்பு வகைகளில் குறிப்பாக பால் பாயசம், பாசந்தி, பூரன் போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம்மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர் என்று புரிந்து கொள்ளலாம். அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை செய்து, நிவேதனம் செய்கின்றனர். அந்த இனிப்புகளை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் தருகின்றனர். மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளி மயமாக்குகின்றனர்.

உத்திரபிரதேசம் – வடக்கு திசை

இந்துமதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். இம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றி வாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்து நடை பெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளிதரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மீ பூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மீ ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிகமிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும்  பரிசுப்பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் “பையாதூஜ்” என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்கள் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார். தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் தீபாவளி.

 

நவராத்ரி – சில தகவல்கள்

navarathri0001ஸ்ரீ ராமனுக்கு இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ‘ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி’ என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரத்தை வலது காதிலே உபதேசிக்கப்பட்டதால்,ஸ்ரீ ராமன், தேவி பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும் இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தமையால் சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது. இராமனும் அன்னையை வழிபட்டு தசக்ரீவனை சம்ஹாரம் செய்தார். தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதா ஸகஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி முதலான சக்தி வாய்ந்த நூல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெறுவோமாக!…….வசுதாமுரளி

கடும் வெயில் காலமும் – கடும் மழைக் காலமும் எமனின் இரண்டு கோரைப்பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன. இந்த இரண்டு
காலத்திலும் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். உடலை பாதிக்கும். அதனால் உள்ளமும் பாதிப்பு அடையும். இந்த இரு வகையான பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பவள் அம்பிகை. அதனால்தான் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாம் ‘நவராத்ரி’ என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம்.

தேவிபாகவதம்:….

தக்ஷப் பிரஜாபதியின் மகள் தாட்சாயணி, தக்ஷன் விருப்பத்துக்கு மாறாக ஈசனை மணக்கிறாள். அதனால் தக்ஷன் ஈஸ்வரன்பால் வெறுப்புற்றான், தான் செய்யும் யாகத்துக்கு ஈசுவரனை அழைக்கவில்லை. எனினும் தாட்சாயணி கணவருக்காக நியாயம்
கேட்டு அங்கே சென்றாள். தன்னையும் தன் கணவரையும் தந்தை நிந்திப்பதைக் கேட்டு மனம் பொறாது அங்கேயே உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபம் அடைந்த சிவன் யாகத்தை அழித்து, தக்ஷனையும் சிரச்சேதம் செய்தார். உயிர் நீத்த தேவியின் உடலைத் தோள்மீது போட்டுக்கொண்டு திரியலானார். மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அந்தப் புனித உடலைத் துண்டுகளாகும்படிச் செய்து சிவபிரானின் தாபத்தைத் தணித்தார். அப்படித் துண்டுகளாகிய தேவியின் உடல் பல இடங்களிலும் விழுந்தது. அப்படி மண்ணில் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் எனப்போற்றப்படுகின்றன.
சாக்தபீடங்கள் நான்கு , ஏழு , எட்டு , பத்து, பதினெட்டு, நாற்பத்து இரண்டு, ஐம்பது, ஐம்பத்து இரண்டு, நூற்றுஎட்டு என்று பல விதமாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக அன்னையின் தேகம் அக்ஷரமயமானதால் அக்ஷரங்களின் எண்ணிக்கைப்படி ஐம்பத்தி ஒன்று எனச் சொல்லப்படுகின்றன. இந்த சாக்த பீடங்களும்,மற்ற தேவிக்ஷேத்ரங்களும் சேர்ந்து பாரதநாட்டைப் புண்ணிய பூமி யாக்குகின்றன.
முப்பெரும் தேவியர்:
நவராத்ரியின் போது, முதல் மூன்று நாட்கள் ‘ துர்கை’ வழிபாடாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் ‘லட்சுமி‘ வழிபாடாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் ‘சரஸ்வதி’ வழிபாடாகவும் செய்யப்படுகிறது. இந்த மூன்று சம்ஹாரத்தில் ஆரம்பத்தில் வரக்கூடிய மது-கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும்,அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மஹாலட்சுமி ஆகவும்,மூன்றாவது கதையில் வரும் சும்ப-நிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மஹாசரஸ்வதியாகவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது .

தேவி மகாத்மியம் :
தேவி மூன்று வடிவுடையவள் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் காளிரூபம், லக்ஷ்மீ ரூபம், ஸரஸ்வதி ரூபம்.
தேவர்கள் செய்த கடும் தவத்தினால், தன் சக்தி சேனைகளுடன் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுர அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே “தேவி மகாத்மியம்” எனப்படுவது.தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவது மாகவோ நவராத்ரி நாட்களில் படிப்பவர்கள், தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும், தீர’ தேவிமகாத்மிய’ பாராயணமே சிறந்த வழி.

கொலு: ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக’ கொலு’ என்று புரட்டாசி அமாவாசையன்று, நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.

கொலு வைப்பது:

‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!’ என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள்.

படி தன்மை பொம்மைகள்

கீழிருந்து 1 ஓரறிவு செடி,கொடி,மரங்கள், பூங்கா……

2 இரண்டறிவு நத்தை,சங்கு,- மெள்ள ஊர்வன….

3 மூன்றறிவு எறும்பு – தரையில் ஊர்வன…

4 நான்கறிவு பறவை, வண்டு – பறப்பன

5 ஐந்தறிவு பசு போன்ற விலங்கினங்கள்

6 ஆறறிவு மனித பொம்மைகள்,செட்டியார்

7 மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர்,

8 தெய்வம் தசாவதாரம்

9 பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம்

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன
என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.
பன்பெயர் நாயகி : அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப் படும் போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்த வளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும்,மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள்.சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப் படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய
வடி வெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.

துர்கா பூஜை : இமவானின் புத்ரியாக அவள் இறங்கி வரும் திருவிழாவே துர்கா பூஜைத்திருவிழாவாகப் போற்றப்படுகிறது. அப்படி அவள் வரும்போது லட்சுமி, ஸரஸ்வதி, கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் வருகிறார்கள். மனிதனின் நல் வாழ்வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்ட சிறு சேனையின் தலைவியே அவள். அவளே அனைத்தும் ஒருங்கமைந்த சக்தி சொரூபம். செல்வத்தைப் பெருக்கும் சின்னமாக லக்ஷ்மி, கலைஞானங்கள் அளிக்க ஸரஸ்வதி, விக்னமின்றிச் செயல்பட கணபதி, ஆற்றலை வளர்க்க முருகன் இப்படி அம்பிகையின்
அம்சங்களாகவே இந்த நால்வரையும் பார்த்துத் தொகுத்து வழிபடுவதுதான் துர்கா பூஜை. நிறைவாழ்வின் பொலிவுகளை விளக்குகின்ற சக்தியாக அவை அமைந்துள்ளன.

நவராத்ரியின்போது செய்ய வேண்டிய நவ கன்னிகை பூஜை:

நவராத்ரி காலத்தில் ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்யவேண்டிய முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர்விரிவாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமான விதிகள்:

நாள் பெண்ணின் பெயர் பலன்

முதல் நாள் குமாரிகா-சுமார் 2 வயது தரித்திர நாசம்

2 வதுநாள் திரிமூர்த்தி – சுமார் 3 வயது தனதான்ய வளம்

3வது நாள் கல்யாணி – சுமார் 4 வயது பகை ஒழிதல்

4வது நாள் ரோகிணி – சுமார் 5 வயது கல்வி வளர்ச்சி

5வது நாள் காளிகா – சுமார் 6 வயது துன்பம் நீங்குதல்

6வது நாள் சண்டிகா -சுமார் 7 வயது செல்வ வளர்ச்சி

7வது நாள் ஸாம்பவி -சுமார் 8 வயது க்ஷேம விருத்தி

8வது நாள் துர்கா -சுமார் 9 வயது பயம் நீங்குதல்

8வது நாள் சுபத்ரா- சுமார் 10 வயது ஸர்வ மங்களம்

உண்டாதல்

நவராத்ரி பூஜையின் விரிவான விளக்கங்களுக்கு ‘லிப்கோ‘வின் “நவராத்ரி பூஜை” நூலைக்காண்க…. 636

இந்தியாவில் நவராத்ரி: இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நவராத்ரி விழா ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அதே போலக் கர்நாடகத்தில் தசராவென்றும்,தமிழ்நாட்டில் நவராத்ரி என்றும் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், சிற்பிகள், வித்வான்கள், தொழிலாளர்கள் என்று அனைவரையும் ஈடுபடுத்தும் மகோன்னத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடு முழுவதும், எல்லாப் பிரிவினரையும் ஈடுபடுத்தும் தனிப்பெருமை நவராத்ரி விழாவிற்கு இருக்கிறது. மரப்பாச்சிகளால் ஆன கொலுவையே மைசூர் வாசிகள் நவராத்ரியில் வைத்து மகிழ்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் நவராத்ரி முதல் நாளன்று, சிறு மண்தொட்டிகளில் நவதான்யங்களைத் தூவி பாலிகை வளர்ப்பார்கள்.
நவராத்ரி ஒன்பது நாட்களும் தேவி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, விஜயதசமியன்று பெண்கள், பாலிகையை ஆற்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் கூத்தனூரில் உள்ள ஸரஸ்வதி கோயில் பிரபலமானது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்கள் வெளிமண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்வர். அன்று எல்லோரும் தேவியின் பாதங்களுக்கு மலர் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஹிமாச்சலத்திலுள்ள ‘குலு‘ என்னும் பகுதியில் உள்ள சிறிய கோயில்களிலிருந்து விக்ரஹங்கள் ஊர்வலமாக
கொண்டுவரப்பட்டு, ரகுநாத் ஜி மந்திர் முன்பு நவராத்ரி விழா நடத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பொது இடங்களில் கூட மகிஷாசுரமர்த்தினி திருவுருவம் வைக்கப்பட்டு, தசரா பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயதசமி அன்று பூஜை செய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக வீதிகளில் உலாவந்து கடலில் கரைக்கப்படுகின்றன.

வடநாடுகளில் நவராத்ரி நாட்களில் ‘ ராம் லீலா‘ என்ற நிகழ்ச்சி பொது இடங்களில் நடக்கிறது. துர்கை மகிஷாசுரனை வென்ற நாள்
விஜயதசமி என்று கூறப்பட்டாலும், சில இடங்களில் ராமன் ராவணனை வதைத்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டிலும் ஸரஸ்வதி வழிபாடு:

ஜப்பான் நாட்டில் ஸரஸ்வதியை’ பென்டன்’ என்றும் திபெத் நாட்டில் ஸரஸ்வதியை ‘யங்சன்ம’ என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள்
பாலித்தீவுப்பகுதியில்’கலுங்கன்’ என்று ஸரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

நவராத்ரியில் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:

ஒன்பது நாட்களும் “வபனம்” (முடி நீக்குதல்) ஆகாது: மருந்துண்ணல் கூடாது.
பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்கவேண்டும்.
இரவில் பட்டினி இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பகலெல்லாம் நோன்பு இருந்து, இரவில் அன்னையின் வழிபாடு நிறைந்த பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இதுவும் ஏற்றதே!
இந்த ஒன்பது நாட்களிலும் பானகமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம். இக்காலத்தில் வீட்டிற்கு வரும் சுவாசினிகளை ஜன்ம விரோதியாக் இருந்தாலும் சக்திவடிவமாகவே பாவித்து தாம்பூலம் அளித்து அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்தல் வேண்டும்.
தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதாஸகஸ்ரநாமம் முதலான ஸம்ஸ்க்ருத நூல்களும் அபிராமி அந்தாதி,அபயாம்பிகை சதகம் முதலான தமிழ் நூல்களும் அம்பாளின் பெருமைகளை உணர்த்துபவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்களைப் படித்து அம்பிகையின் அருளை பெறுவீர்களாக! மேலும் நவராத்ரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா அஷ்டோத்ரமும், ஸஹஸ்ரநாமமும்,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ர நாமமும், அடுத்த மூன்று நாட்கள் ஸரஸ்வதி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ரநாமமும் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பாராயணம் செய்து, நற்பலன்களைப் பெறுவோமாக!

 

திருவோணப் பண்டிகை

Onam Festival

இயற்கை எழில் நிரம்பி வழியும் கேரள மாநிலத்து முதன்மை பண்டிகைகளுள் திருவோணப் பண்டிகை மிக விசேஷமானதாகும். இவ்வருடம்(2011) செப் – 9 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. மலையாள சிங்கம் மாதத்தின் துவக்க தினமே ஓணமாகக் கொண்டாடப்படுகின்றது. மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் அமைந்துள்ள இப்பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த 10 நாட்களும் கேரளா ஓர் சொர்க்க பூமியாய் காட்சியளிக்கிறது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,படகு போட்டிகள் , அழகான அலங்காரங்களுடன் பவனி வரும் யானைகளின் ஊர்வலங்கள், மோகினி ஆட்டம் என ஊரே விழாக்கோலம் பூணுகிறது. மலையாள நாட்டவர் மட்டுமல்லாது சாதி,சமய வேறுபாடின்றி,அனைத்து மதத்தவர்களும் ஓணத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். – Vasudha Murali.

ஓணம் “சத்யா: பத்தாம் நாளான நிறைவு நாளன்று, ஓணம் “சத்யா” (Sadya) என்ற அறுசுவை விருந்து, பெரிய வாழை இலையில் படைக்கப்படுகிறது. இவ் விருந்தில் (சிவப்பரிசி அன்னம் உட்பட) குறைந்த பட்சம் 12 உணவு வகைகள் இடம் பெறும். இவ்விருந்தில் படைக்கப்படும் உணவு வகைகளுக்கு வாழை இலையில் பரிமாற ப்ரத்யேக இடங்களும் ஒதுக்கப் படுகின்றன.

”சத்யா” என்பது மிகவும் விசேடமான விருந்தாகும். அவ்விருந்தில் இனிப்பு, புளிப்பு,துவர்ப்பு, காரம், கசப்பு போன்ற நவசுவை (ஒன்பது சுவை)உணவுகள்  (ஓலன், காளான், உப்பேரி, புளி இஞ்சி சட்னி, ப்ரதமன் போன்றவை) இடம்பெறும். எலுமிச்சை, வாழை, மா, பலா என்ற நான்கு வகையான பழங்கள் வெவ்வேறு விதமான உணவு வகைகளாய் தயாரிக்கப்படுகின்றன. (மாங்காய் பச்சடி, எரிசேரி, எலுமிச்சை ஊறுகாய், வாழைக்காய் வறுவல்)

ஓணத்தன்று செய்யப்படும் பால் அடைப் ப்ரதமன், பழப் பாயசம், பலாப்பழ ப்ரதமன் போன்றவை மிகவும் ருசியானவை.

புத்தாடை: அறுவடைத் திருநாளான ஓணத்தன்று கேரள மக்கள் புத்தாடை அணிந்து மகிழ்கின்றனர். ஓணம் அன்று ஆடவர் “முண்டு” என்ற உடையையும் பெண்கள் பிரபலமான “கஸவு” அல்லது ‘பலராமபுரம் சேலை’ என்றழைக்கப்படும் சேலையையும் உடுத்துகின்றனர். (கூந்தலை மணம் கவழ் மல்லிகை அலங்கரிக்கின்றது).

ஆபரணம்: ஓணத்தன்று பெரும்பாலான பெண்கள் எளிய தங்க நகைகளையே விரும்பி அணிகின்றனர்.

தரிசனம்/புராணம்: இத்திருவிழாவை தமிழகத்தில் கொண்டாட விரும்பும் பக்தர்கள், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளைத் தரிசித்து வரலாம். மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். இந்த காட்சியைக் காண விரும்பிய

மிருகண்டு என்ற முனிவர், பிரம்மா தந்த ஆலோசனைப்படி பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் அமைந்த கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (திருக்கோவிலூர்) தவம் செய்தார். அங்கு, அந்தணர் வடிவில் வந்த திருமால் விஸ்வரூப தரிசனத்தை முனிவருக்கு அருளியதாக புராணம்.

வண்ணக்கோலம்:- ஓணத்தன்று, ஒவ்வோர் கேரள இல்லத்து வாசலிலும் வண்ண வண்ண மலர்களால் ஆன கோலம் நம்மை வரவேற்கும். இதற்கு ”ஓணக்கோலம்”  அல்லது “பூக்கலம்” என்று பெயர். மரபு படி,பழங்காலத்தில், இக்கோலம் பத்து நாட்களை குறிக்கும் வகையில் பத்து வளையங்களாக போடப்பட்டு வந்தது. முதல் நாள் ஒரு பூவைக் கொண்டும், இரண்டாம் நாள் இரு பூக்களைக் கொண்டும் இக்கோலம் பத்து நாட்களில் பெரிது படுத்தப் படும்! மகளிரும் குழந்தைகளும் இணைந்து வடிமைப்பதால் அவர்களுக்குள் பாசப்பிணைப்பை இக்கோலம் ஏற்படுத்துகின்றது.

நிறைவாக, ஓணப்பண்டிகை உறவுகளை பலப்படுத்தி குடும்பத்தில் குதூகலத்தை பெறுக்குகின்றது. இந்நந்நாளில் அனைவரும் இன்புற்று ஒற்றுமையாய் வாழ்வோமாக!

 

ஆடியின் அற்புதங்கள்

kamakshiimage
இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.ஆடி மாதப் பிறப்பு முதல் ,தை மாதம் மகர சங்கராந்தி வரை,பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.(அம்மன் வழிபாடு, ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிக்கிருத்திகை) நாமும் அவர்களை போல் பெருமை வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனைத் துதித்து மகிழ்வோமாக!

நன்றே சொல்வோம்!
நன்றே செய்வோம்!

- Vasudha Murali.

ஆடியின் பெருமைகளும் வழிபாடுகளும்

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.

ஆடிப் பதினெட்டு:

ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.

மனிதகுலம் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ‘ஆடிப் பதினெட்டு ‘ என்று கொண்டாடுகிறார்கள்.

பதினெட்டு என்ற எண் ‘ஜய’ த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. எனவேதான், காவிரி அன்னைக்கு ‘ஆடிப் பதினெட்டு’அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி:

ஆடிமாதத்தில் அம்மன் கோயில்களில் குறிப்பாக மாரியம்மன் கோயில்களில் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீமிதிப்பது, கூழ் வார்த்தல் போன்ற விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆடிமாதத்தில் தேய்பிறை ஏகாதசி – யோகிநி ஏகாதசி. வளர்பிறை ஏகாதசி – சயிநி ஏகாதசி. ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ச்ரார்த்தம் செய்வது மிகவும் நல்லது.

சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம். ஆகையால் ஆடி அமாவாசை தர்பணத்திற்கு மிகவும் உயர்ந்தகாலம். இதனால், பித்ருக்கள் மகிழ்ந்து நமக்கு சகல செல்வத்தையும் வழங்குவார்கள்.

குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான். பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.

திரிவிக்ரமனாகத் தோன்றி மஹாபலியின் கர்வத்தை அடக்கிய மஹாவிஷ்ணு அவனைப் பாதாளத்துக்கு அனுப்பியவுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று பாம்பணையில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியில்தான் சயனித்தார். எனவே, இது சயநீ ஏகாதசி எனப்பட்டது.

ஆடிப்பூரம் :

கோயில்களில் ஆடிப்பூர உத்ஸவம் விசேஷமாக நடைபெறும். குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிமாத வள்ர்பிறை துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரையில் துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும்.

ஆடியும் ஆறுமுகனும்…

கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்
கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில்
வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் “கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்.”

எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப் படுகிறது.

 

பகவானின் ஸ்ருஷ்டியும், அவதாரங்களும்


நாரதர் ஒரு சமயம் ப்ரம்மாவை பகவத் ஸ்ருஷ்டி விவரங்களைக் கேட்டார். ப்ரம்மா அதன் விவரங்களைச் சொன்னார்.
மாயை என்பது ப்ரக்ருதி. அது ஈச்வரனுக்கு சரீரம் போன்றதாகும். பகவான் தன் ஸங்கல்பத்தினால் நாமரூபங்களை ஸ்ருஷ்டித்து அவற்றுள் புகுந்தான். அவனே விராட் புருஷன் உருவில் ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள் உடையவன். அவன் நாபிக்குக்  கீழ் அதல, விதல, ஸுதல, தலாதல, மஹாதல, ரஸாதல, பாதாள லோகங்கள் ஏழு இருக்கின்றன. அவனுடைய நாபிக்கு மேல் பூர், புவர், ஸுவர், மஹர், ஜனோ, தபோ, ஸத்ய லோகங்கள் ஏழு இருக்கின்றன. நான் அவனுடைய நாபீ கமலத்தினின்று உண்டானேன். நானே ஜகத்தை ஸ்ருஷ்டிக்கின்றேன். ருத்ரன் ஜகத்தை ஸம்ஹரிக்கிறான்.

பகவானே விஷ்ணுவாய் அவதரித்து ப்ரபஞ்சத்தைப் பாதுகாக்கிறான். விராட் புருஷன் தான் முதல் அவதாரம். லீலார்த்தமாய் அவனுடைய மற்ற அவதாரங்கள் ஏற்பட்டன. பிறகு அவர் மூலம், இப்பொழுது வழங்கிவரும் பாகவதம் உருவாயிற்று. இவ்வாக்கியஙகள், ஒப்பற்ற க்ரந்த ரத்னமான பாகவதத்தின் சுருக்கமான “ஸ்ரீமத் பாகவத ரஸாம்ருத”த்தில் இடம் பெற்றுள்ளன. சுவாரஸ்யமான கதைகளும், தகவல்களும் கொண்ட இந்நூலை அனைவரும் வாசிப்பீர்!

வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெறுவீர்!

-வசுதா முரளி