தைத்திருநாள் – பொங்கல் விழா –ஜனவரி 14 – 17

தை மாதத்தில் தமிழர்கள் விசேடமாக கொண்டாடும் பொங்கல் விழா பிறந்தது எப்படி? இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் இவ்விழா இருந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் 28 நாட்கள் கொண்டாடியதற்கான சான்று இருக்கிறது.

மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால்,மேகம் மும்மாரி பெய்து, பயிர் பச்சை செழிக்கும் என நம்பி மக்கள் இதனை, இந்திர விழாவாகக் கொண்டாடினர்.  அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்து அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில் சூரியனைப்பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து, தமது நன்றியை விவசாயிகள் தெரிவிக்கும் பொங்கல் திருநாளாக மக்கள் வழிபட துவங்கிவிட்டனர்.

இப்போது நாம் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் மட்டுமே இவ்விழாவை கொண்டாடுகிறோம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் – போகி

புதுப்பானையில் புது அரிசியிட்டு, கரும்பு, மஞ்சள் கிழங்கு கட்டி, சூரியனை வழிபட்டு சமைக்கும் – தைப்பொங்கல்.

உழவுத்தொழிலுக்கு உதவியாகயிருக்கும் கால் நடைகளுக்காக கொண்டாடும் – மாட்டுப்பொங்கல்

இறுதியாக,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் பொது இடங்களுக்கு குடும்பத்தாருடன் சென்று, இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் தரும்  – காணும் பொங்கல்.

ஜாதி மத பேதமின்றி சமத்துவம் வளர்க்கும் நோக்கோடு துவக்கப்பட்டது தான் பொங்கல் விழா.

இயற்கையையும் உழைப்பையும் மையமாக வைத்து கொண்டாடப்படும் – பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்!

அனைவரும் இந்நந்நாளில் எங்களது ”சூரிய சதகம்”,”ஆதித்ய ஹ்ருதயம்” போன்ற புத்தகங்களை வாசித்து வளம் பெறுங்கள்.

– வசுதா முரளி.

 

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

01.01.2012

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே, கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே, மணிக்கதவம் தாள்திறவாய்,
ஆயர் சிறுமிய ரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,
வாயால்முன்னமுன்னம் மாற்றாதே யம்மா, நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.  16.

02.01.2012

அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்,
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே,
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்,
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த,
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா,
உம்பியும் நீயு முறங்கேலோ ரெம்பாவாய்.  17

03.01.2012

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்,
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி! யழைத்தனகாண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.   18.

04.01.2012

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்,
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்,
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை,
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். 19.

05.01.2012

முப்பத்து மூவ ரமரர்க்கு முன்சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய், செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்,
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்,
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்,
உக்குமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,
இப்போதே யெம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்.  20

06.01.2012

ஏற்ற கலங்க ளெதிர்பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வளளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்,
ஊற்ற முடையாய்! பெரியாய், உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றா ருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். 21

07.01.2012

அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்க மிருப்பார்போல் வந்து தலைபெய்தோம்,
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ,
திங்களு மாதித் தியனு மெழுந்தாற்போல்
அங்க னிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். 22

08.01.2012

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,
சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்ட எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்டிப் புறப்பட்டு,
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா, உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த
காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். ** 23.

09.1.2012

அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி,
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி,
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி,
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய். ** 24.

10.01.2012
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளர,
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை,
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.  25.

11.01.2012

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே,
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே,
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.  26.

12.01.2012

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா,உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே,
பாடகமே யென்றனைய பல்கனும் யாமணிவோம்,
ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு,
மூடநெய் பெய்து முழங்கை வழிவார,
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ** 27

13.01.2012

கறைவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்று மில்லாத கோவிந்தா, உன்றன்னோ
டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது,
அறியாத பிள்ளைகளோ மன்பினால், உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். ** 28

14.01.2012

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது,
இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா,
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன்றன்னோ
டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம்,
மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். ** 29

15.01.2012

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,
இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். ** 30.
——————————————————-

 

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

24.12.11
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான்போ கின்றரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.  8.

25.12.11
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமம் கமிழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்,
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்,
ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.  9.

26.12.11
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்,
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ,
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே,
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். 10

27.12.11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே,
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செலவப்பெண் டாட்டி, நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். 11

28.12.11
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி,
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்,
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி,
சினத்தினால் தென்னிலங்ககைக் கோமானைச்செற்ற,
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்,
இனித்தா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம்,
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். 12

29.12.11

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை,
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்,
வெள்ளி யெழுந்து வியாழ முழங்கிற்று,
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.  13
30.12.11
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்,
செங்கழுநீர் வாழ்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பின காண்,
செங்கல் பொடிக்கூறை வெண்பால் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்,
எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்,
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்,
சங்கொடு சக்கர மேந்தும் தடக்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடலோ ரெம்பாவாய். 14

31.12.11
எல்லே! இளங்கிளியே! இன்ன முறங்குதியோ,
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்,
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக,
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்,
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.  15.

 

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

18.12.11

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரொம்பாவாய்.   2

19.12.11

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்த சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.**

20.12.11
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்,
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வ னுருவம் போல் மெய்கறுத்து,
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,
வாழ வுலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

21.12.11
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல் விளக்கஞ் செய்ததா மோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர்த்தூ வித்தொழுது,
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

22.12.11
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ,
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள வெழுத்து அரியென்ற பேரரவம்,
உள்ளம் புகுந்த குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

23.12.11
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன், கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே,
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,
வாச நறுங்குழ லாய்ச்சியர், மத்தினால்
ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ,
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி,
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ,
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய். 7

24.12.11
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான்போ கின்றரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

25.12.11
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமம் கமிழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்,
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்,
ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

 

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை-1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்,
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்,
நாராயணனே நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

 

கார்த்திகைத் தீபத்திருவிழா

KarthigaiDeepam‘கார்த்திகை தீபம்’ மூன்று நாட்கள்  தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தவிர, இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும்  இல்லங்களில்  தீபங்களை ஏற்றி வைக்கும் நேர்த்தியான காட்சியை இன்றும் நாம் பார்க்கக்கூடும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று  அழைக்கப்படுகிறது. விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி  வழிபடுகிறார்கள்.

”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் பனை ஒலையால் சொக்கப்பானை வேய்ந்து  சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

”சொக்கப்பானையை வணங் குவது சொக்கப்பனை வணங் குவது ஆகும்.” சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப் பானை ஆகும்.

1. கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

கங்கைக்கு தீபம் ………
இன்றும் தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தஞ்சை மாவட்ட காவிரி தீரவாசிகள் சூரியன் நன்கு மறைந்த பின்னர் இம்மாதத்தில் “மந்தாரை இலை”யினால் செய்யப்பட்ட சிறிய ஓடத்தில் தீபம் ஏற்றி வைத்து, வடநாட்டினர் ஹரித்வாரத்தில் கங்கையில் சோதி வழிபாடு செய்வதை ஒக்க – காவிரியில் சமர்ப்பிக்கின்றனர். அத்தீப ஓடங்கள் ஒளிவீசிக் கொண்டு ஓடும் நதியில் மிதந்து போகும் அற்புதமான காட்சியைக் கண்ணுற்று மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள்.

பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச் சிலக்குறிப்புகள்

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.

நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.

”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

தீப ஒளியின் மகிமையைப் பற்றி தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் கதைகள்:

1.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்தார். தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயை குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நின்று விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

2.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். இதைப் பற்றி ரிக்வேதம், பாஸ்கரசங்கிதை, சரபஉபநிடதம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

3.கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் காட்சி அளிக்கிறார்.

திருவண்ணாமலையைப் பற்றி… ……

திருவண்ணாமலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 266 அடி உயரத்தில் உள்ளது. தெற்கேயுள்ள முக்கியமான சைவக் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், பூமியின் இருதய ஸ்தானமாகும். நினைத்தாலே முக்தி தரும். இம் மலைக்கோயிலில் அருணாச்சலேஸ்வரர்தான் பிரதான தெய்வம்.

இந்த மலையுகத்திற்கு யுகம் மாறுபட்டு வருவதாக “ஸ்கந்த புராணம்” வர்ணித்துள்ளது. முதல் யுகமாகிய கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் மிகுந்த ஒளிவீசும் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் திருவுருக்கொண்டு “அருணாசலம்” என்று திருப்பெயர் பெற்றது என்பர்.

இக்கோயில் ஜோதிர்லிங்கம் எனப்படும் லிங்கோத்பவர்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், விஜயநகர மன்னன் மற்றும் தஞ்சாவூரின் நாயக்கர்கள் இக்கோயிலுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் பற்றி…. ……..

அண்ணாமலை தீபம்: சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது. 51/2 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான உலோக பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு ) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. 30 மீட்டர் காடாத் துணியும் 2 கிலோ கற்பூரமும் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி 35 கி.மீ தொலைவு வரை தெரியும்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.

இன்றும் தீபதரிசனத்திற்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடி வந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும் அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செயவர்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்   முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக   ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

ஞானஒளியைத் தரும் இக்கார்த்திகை மாதத்தில், கந்தனின் கதையை விரிவாக உணர்த்தும் எங்களது வெளியீடான ” கந்த புராணம் ” மற்றும்  மணியான பாடல்கள் அடங்கிய ” சைவத்திரு முறைகள் ” போன்ற புத்தகங்களைப் படித்து  அண்ணாமலையானின் பரிபூரண அருளைப்பெறுவோமாக!

 

தீபாவளிப்பண்டிகை

அஸத்தோமா ஸத்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’ என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம். தீபாவளியன்று , எங்களது லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்”  என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றிலக்ஷ்மிதேவியைபூஜித்து,  இறைவனுடைய பரிபூரணஅருளைப்பெறுவோமாக !                                                                               

-வசுதா முரளி

தீபம் என்றால் ஒளிவிளக்கு , ஆவளி என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி ,மஹாலக்ஷ்மிக்கு விசேஷமாக பூஜை செய்தால் செல்வம் நிறைய கிடைக்கும் என்கிறது இந்த ஸ்லோகம்

       ”நீராஜிதோ மஹாலக்ஷ்மி மர்ச்சயன் ச்ரியமச்சனுதே      

        தீபைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸம்ருதா”

பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து   அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்  கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளி தினே வஸேத்” எனும்

சாஸ்திர வரிகள்  இதை நிரூபிக்கின்றன.எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா? ” என்று வினவி விசாரிக்கிறோம்.

லக்ஷ்மி தேவி உலகத்தாரின் சகல வெற்றிக்கும் காரணமான தெய்வம். மனஅமைதி, அறிவு, செல்வம், தானியம் போன்ற பலவற்றை அளிக்கும் லக்ஷ்மி ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். சிலருக்கு பொருட்செல்வம் தரும் தனலக்ஷ்மி, சிலருக்கு வெற்றியைத் தரும் விஜயலக்ஷ்மி, சிலருக்கு  வாழ்வில் ஒளி தரும்  ராஜலக்ஷ்மி, சிலருக்கு வேண்டிய வரம் தரும் வரலக்ஷ்மி, பலருக்கு இனிய இல்லறத்தை தரும் கிரஹலக்ஷ்மி.  இல்லத்தில் அமைதி, பளிச்சென்ற சுத்தம், குழந்தைகளின் சிரிப்பு, மென்மையான இசை, நறுமணம் நிறைந்த உணவு ஆகியவை வீட்டில் லக்ஷ்மியை சுண்டி இழுக்கக்கூடியவை என்று கருதப்படுகிறது. எனவேதான் தீபாவளி சமயம் லக்ஷ்மி தேவிக்கு விருப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி தேவியை வரவேற்று வளமான வாழ்க்கையைத் தருமாறு மக்கள் வேண்டுகின்றனர். தீபாவளியன்று, வழக்கங்கள் பல்வேறாயினும் குதூகலமும் கொண்டாட்டமும் ஒன்றே. ஜாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகையும் இதுவே.

1. தீபாவளியைப் பற்றி ………

“மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் தான் பிறந்த பயனை மறந்து, தன்னைக்காத்துக் கொள்ளவும் மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருள்களில் தானே மயங்கி, அழிவுப் பாதையில் செல்கிறான். மனிதனுடைய பிரத்தியேக உயர்ந்த குணங்களான விவேகம், பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்கே  உரிய  அகங்காரமானது   பயனற்றுப்   போகச் செய்துவிடுகிறது. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே  தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, தான் எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழ வைத்துக் கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்யவேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ இறைவனுடைய அருளைப் பெறுவோமாக!”

- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள்

2.தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும்: தீபாவளியை பற்றி நிறைய கதைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய், ஸ்ரீ ராமர்  கைகேயியின்  வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகத் தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள்   ஏற்றி   வாண வேடிக்கைகளுடன்  கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் அனைவரும்  காலம் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

மூன்றாவதாய் தசாவதாரங்களில் ஒன்றான வாமனாவதாரம் பற்றிய கதை. அசுரர்களின் அரசனான பாலி (ப்ரஹலாதனின் பேரன்), மூவுலகையும் ஆட்கொள்ள பகவானை நினைத்து விஸ்வஜித் யாகம் புரிந்து தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து தேவலோகத்தை கைபற்றினார். மனம் வாடிய அதிதி (தேவர்களின் அன்னை) மஹாவிஷ்ணுவிடம் முறையிட, வாமனராய் மிகச் சிறிய பிராமணர் உருவில் அவதரித்து , அஸ்வமேத யாகம் நடத்திக்கொண்டிருந்த அரசன் முன் தோன்றினார். வாமன உருவிலிருந்த விஷ்ணுவும் அரசவையில் பாலியிடம் மூன்று அடி மட்டுமே அளக்கத் தேவையான நிலம் வேண்ட, மன்னனும் அவரது கோரிக்கையை ஏளனமாய் நினைத்து வரம் வழங்கினார். வாமனரோ விஸ்வரூபமெடுத்து தம் முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையையும் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் தேட, பாலியோ வேறு வழியின்றி கொடுத்த வாக்கை நிறைவேற்ற பகவானுக்கு தன் சிரம் தாழ்த்தி இடமளித்தார். இவ்வாறாக சொன்ன சொல்லை காப்பாற்றி மஹாவிஷ்ணுவின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். சில ஊர்களில் பாலியின் கதையை நினைவுகூறும் வகையிலும் தீபாவளித் திருநாளை கொண்டாடுகின்றனர்.

3.மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டம்:

மேற்கு வங்காளம் – கிழக்கு திசை

மஹாளய அமாவாசையன்று தொடங்கி “துர்க்கா பூஜா” கொண்டாடும் வங்காள மக்கள்,  பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருட்டைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் லட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாயி புட்கோ’ என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரம் – மேற்கு திசை

இம் மாநிலத்தினர் தீபாவளிப் பண்டிகையை நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரம் முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். முதல்நாள் நரக சதுர்த்தசி’ அன்று குறிப்பாக இனிப்பு வகைகளில்  பால் பாயசம், பாசந்தி, பூரன் போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம்மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர். இரண்டாவது நாள்  வியாபாரிகள் தங்கள் கடைகளைச் சுத்தம் செய்து புதுக்கணக்கு தொடங்க அன்று மாலை தன்பூஜா’ எனப்படும் லக்ஷ்மி பூஜை’ நடத்துகின்றனர்.   மூன்றாவது நாள் பலி பிரதிபா’ .மஹாபலியை, வாமன அவதாரத்தில் பாதாளத்தில் அழுத்திய நிகழ்ச்சியின் அடையாளமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. எனவே மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளி மயமாக்குகின்றனர். நான்காவது நாள் அன்று சகோதரர்கள் குடும்ப சகிதம் சகோதரிகள் வீட்டுக்குச் செல்லும் நாளை மஹா பிஜ்’ என்று கூறுகிறார்கள்.

உத்திரபிரதேசம் – வடக்கு திசை

வட நாட்டில், தீபாவளிக்கு முதல்நாள், யம தீபம்’ என்று ஏற்றுகிறார்கள். ஒரு பெரிய விளக்கை ஏற்றி வீட்டில் உயரமான இடத்தில் வைப்பதே யம தீப”மாகும்.

இந்துமதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். இம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றி வாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்து நடை பெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளிதரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மி பூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிகமிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும்  பரிசுப்பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் பையாதூஜ்” என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்கள் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார். தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் தீபாவளி.

அஸத்தோமா ஸத்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’ என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அறியாமை, வறுமை, வலிமையின்மை, அதர்மம் இவையாவும் இருளுக்கு சமானம். அறியாமை அகன்று அறிவு நிறைய பெருகுவதும், வறுமை யில்லாமல் வளமாக இருப்பதும், வலிமைபெறுவதும், இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம்.

தீபாவளியன்று , எங்களது லக்ஷ்மீ குபேர பூஜாக்ரமம்”  என்ற நூலின்படி, குபேர பூஜாக்ரமத்தை பின்பற்றி லக்ஷ்மி தேவியை பூஜித்து, தீய குணங்களை அறவே அழித்து, நல்ல மனிதனாக வாழ  இறைவனுடைய பரிபூரண அருளைப் பெறுவோமாக !